‘இனி பாலிவுட்டிலும் தமிழ்த் தொகுப்பாளர்களை அழைப்பார்கள்’ - உற்சாகம் பகிரும் டிடி


சின்னத்திரையில் கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளராக இருந்து வருகிறார் டிடி எனும் திவ்யதர்ஷினி. விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான டிடி கமல், சூர்யா, ஜோதிகா என பல முன்னணி நட்சத்திரங்களைப் பேட்டி எடுத்துள்ளார். மேலும் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். திவ்யதர்ஷினியின் கலகல பேச்சுக்கும் அவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் முறைக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

அந்த வகையில் தற்போது தமிழ் கடந்து பாலிவுட் நிகழ்ச்சிகளையும் தொகுது வழங்க ஆரம்பித்து இருக்கிறார் டிடி. கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் ரண்பீர் கபூர், வாணி கபூர் இணைந்து நடித்துள்ள படம் 'ஷம்ஷேரா'. வரும் 22-ம் தேதி வெளியாகவிருக்கும் இப்படத்தின் அறிமுக விழா இன்று மும்பையில் நடந்துள்ளது. இதனை தொகுத்து வழங்கியதன் மூலம் பாலிவுட்டிலும் தொகுப்பாளராக நுழைந்திருக்கிறார் டிடி.

ரண்பீருடன் எடுத்துள்ள புகைப்படங்களைத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், 'ரண்பீர் ராஜ்கபூருடன் நான் இருக்கும் நிகழ்வு இன்று நடந்தது. பாலிவுட்டில் நடக்கும் இது போன்ற இன்னும் பல நிகழ்வுகளுக்கு தமிழ்த் தொகுப்பாளர்களை அழைப்பார்கள், அதற்கான திறவுகோலாக இது இருக்கும் என நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கொடுத்த படக்குழுவுக்கு நன்றி. பட புரோமோஷனுக்காக நான் ரண்பீருடன் இணைந்து உருவாக்கிய கன்டென்ட்டுகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

டிடியின் இந்த அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ரசிகர்கள், அவரது சின்னத்திரை நண்பர்கள், திரைப்பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

x