`யானைமேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளது’ : நயன்தாரா - விக்னேஷ் திருமணம் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேட்டி


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் பயில்வான் ரங்கநாதன் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் தொடங்கி 401-வது நாளான இன்று மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவச மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவசர சிகிச்சை பிரிவு மற்றும் தலைக்காயமடைந்தோருக்கான சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளின் உறவினர்களுக்கு மதிய உணவினை வழங்கினார். இதில், அட்சய பாத்திரம் டிரஸ்டின் நிறுவனர் நெல்லை பாலு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பயில்வான் ரங்கநாதன், "நடிகை நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் 25 கோடி ரூபாய்க்கு ஓடிடியில் விற்பனை செய்து ஆடம்பர கல்யாணமாக யானை மேல் அம்பாரி ஊர்வலம் போல நடந்துள்ளது. என்ன எதிர்ப்பு வந்தாலும் நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பேசுவேன். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்து அதனை நடத்தியது கிடையாது. எந்த மிரட்டலுக்கும் நான் அஞ்சமாட்டேன். நடிகர், நடிகைகளை பற்றி நான் கூறுவதைக் கேட்க 3 லட்சம் பேர் இருக்கின்றனர். தொடர்ந்து பேசுங்கள் என்று பொதுமக்கள் முதல் காவல் துறை அதிகாரிகள் வரை என்னிடம் கேட்டுக்கொள்கின்றனர். நான் யாரைப் பற்றியும் ஆபாசமாக பேசவில்லை. சட்டத்திற்கு உட்பட்டே பேசுகிறேன்" என்றார்.

மேலும், “தமிழ் சினிமாவில் எம்ஜிஆரைத் தவிர யாரும் யோக்கியர் அல்ல. தமிழ் சினிமாவில் அனைத்து நடிகர், நடிகைகளும் சம்பாதித்த பணத்தைப் பயன்படுத்தி பள்ளி, மருத்துவமனை, திருமண மஹால்தான் கட்டுகிறார்களே தவிர மக்களுக்கு எதுவும் செய்வதில்லை. அதனால், நடிகர்கள் தலைவராவதை ஏற்க இயலாது" என்று பயில்வான் ரங்கநாதன் கூறினார்.

x