இந்தியன்-2 படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு: கமல், ஷங்கர் பதில் அளிக்க உத்தரவு


மதுரை: இந்தியன்-2 படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் ஆகியோர் பதில் அளிக்குமாறு மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை மாவட்ட 4-வது முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: மஞ்சா வர்மக் கலை தற்காப்பு பயிற்சிப் பள்ளி ஆராய்ச்சி கூடம் என்ற பெயரில், கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை தற்காப்பு பயிற்சிகளை அளிக்கிறோம். கடந்த 1996-ல் வெளியான இந்தியன் படத்துக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்பு தளத்தில் வர்மக் கலைகளை கற்றுக் கொடுத்தேன்.

எழுத்தாளர் சுஜாதா மற்றும் ஷங்கர் ஆகியோர் கதைக்குத் தேவையான இடங்களில் வர்மக்கலை சம்பந்தமான சண்டை முறைகளைப் பயன்படுத்தியதுடன், அது தொடர்பான அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.

மேலும், அவர்களுக்கு வர்மக் கலையை செய்து காட்டினேன். பின்னர் நடைபெற்ற தொடர் படப்பிடிப்பில் பங்கேற்று, வர்மம் தொடர்பான சண்டைக் காட்சிகளை அமைத்துக் கொடுத்தேன். அதன் பயனாக படத்தின் டைட்டில்கார்டில் எனது பெயர் சேர்க்கப்பட்டது.

இந்தியன் படத்தில் வர்மக்கலை சண்டைக் காட்சிகளில் நான் பயன்படுத்திய முத்திரைகள் அனைத்தும், எனது தொடு வர்மம் 96 வர்மக்கலை என்ற புத்தகத்தில் இடம் பெற்ற முத்திரைகளாகும். இதற்கு முன்பு வேறு எந்தப் புத்தகத்திலும் இந்த முத்திரைகள், படங்களுடன் வந்தது இல்லை. இந்நிலையில், இந்தியன் படத்தின் 2-ம் பாகம் எடுக்கப்போவதாக செய்தி வெளியானது.

இந்தியன்-2 பட போஸ்டர்களில் நான் ஏற்கெனவே சொல்லிக் கொடுத்த முத்திரையைப் பயன்படுத்தி விளம்பரம் செய்யப்பட்டது. எனது அனுமதி இல்லாமல் இந்தியன்-2 படத்தில் வர்மக்கலை முத்திரையைப் பயன்படுத்தி உள்ளனர். என்னிடம் தடையில்லா சான்று பெற வேண்டும். எனது பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியும், உரிய பதில் இல்லை. எனவே, எனது கோரிக்கையை நிறைவேற்றும் வரை இந்தியன்-2 படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி செல்வ மகேஸ்வரி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த மனு தொடர்பாக படத் தயாரிப்பாளர் சுபாஸ்கரன், இயக்குநர் ஷங்கர், நடிகர் கமலஹாசன் ஆகியோருக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 9-ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

x