கள்ளக்குறிச்சி விவகாரம்...பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தவிர்க்க விஜய் உத்தரவு!


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேற்று மாலை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ள நிலையில், நாளை தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாளை ஜூன் 22ம் தேதி நடிகர் விஜய் தனது 50வது பிறந்தநாளைக் கொண்டாட உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகளை ரசிகர்கள் கடந்த ஒரு வார காலமாகவே செய்து வந்தனர். இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகள் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு விஜய் கண்டனம் தெரிவித்திருந்தார். நேற்று மாலை கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்த நடிகர் விஜய், நாளை தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறு ரசிகர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதற்குப் பதிலாக, மருத்துவமனையில் உதவி தேவைப்படுபவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். ’தலைவரின் ஆணைப்படி கழக நிர்வாகிகள் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.