கரோனா: ‘வலிமை’யைத் தொடர்ந்து விஷால் படமும் தள்ளிப்போனது


வலிமை

அதிகரிக்கும் கரோனா பரவல் காரணமாக, பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த விஷால் படமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வீரமே வாகை சூடும்

நாட்டில் கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. ஒரு வாரத்துக்கு முன்புவரை குறைந்திருந்த கரோனா, ஒமைக்ரான் வரவுக்குப் பிறகு வேகமாகப் பரவி வருகிறது. இன்று புதிதாக 1,17,100 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, திரையரங்கில் 50 சதவீத பார்வையாளர்களுக்கே அனுமதி போன்ற கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்துள்ளது. இதனால், பொங்கலுக்கு வெளியாவதாக இருந்த புதிய திரைப்படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

கொம்புவச்ச சிங்கம்டா

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ‘வலிமை’, ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் நடித்துள்ள ‘ஆர் ஆர் ஆர்’, பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ ஆகிய படங்களின் வெளியீடுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் விஷால் நடித்துள்ள ‘வீரமே வாகை சூடும்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்தப் படத்தின் வெளியீடும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் இந்த மாதம் 26-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. து.பா.சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தை, விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இதற்கிடையே, சசிகுமார் நடித்துள்ள ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படம் வரும் 13-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா செபஸ்டியன், சூரி, மறைந்த இயக்குநர் மகேந்திரன், ஹரிஷ் பெரடி உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இந்தர்குமார் தயாரித்துள்ளார்.

x