சூர்யா, இயக்குநர் ஞானவேல் மீது வழக்கு


த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோள் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' திரைப்படத்தில், வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அது தொடர்பாக சூர்யாவை நோக்கி 9 கேள்விகள் கொண்ட அறிக்கையை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக 'ஜெய் பீம்' படக்குழு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், ரூ.5 கோடி இழப்பீடு தர வேண்டும் என்றும் கோரி வன்னியர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் மூலம், சூர்யாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

தொடர்ந்து, இயக்குநர் ஞானவேல், ‘ஜெய் பீம் திரைப்படத்துக்கு எழுந்த சில எதிர்மறை கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. திரைப்பட ஆக்கத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. மனவருத்தம் அடைந்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜெய் பீம் திரைப்பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவதூறு பரப்பியது, இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, சிதம்பரம் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

x