’ஜெய் பீம்’ திரைப்படத்தில் வன்னியர் காலண்டர் மாற்றப்பட்டது


த.செ.ஞானவேல் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் சில நாட்களுக்கு முன்பு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் 'ஜெய் பீம்'. இத்திரைப்படம், 1995-ம் ஆண்டு கடலூர் மாவட்டத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவர் போலீஸ் காவலில் கொலை செய்யப்பட்டதைப் பற்றியும், தனது கணவரை மீட்க அவரது மனைவி பார்வதி நடத்திய சட்டப் போராட்டத்தைப் பற்றியும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியது. இத்திரைப்படம் நல்ல வரவேற்பைப்பெற்றது.

அதேசமயம், படத்தில் கொடுமைக்கார போலீஸ் கதாபாத்திரத்தை வன்னியர் சாதிப் பிரிவைச் சேர்ந்தவர் போன்று சித்தரித்ததற்கு, அந்தச் சமுதாயத்தினர் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். படத்தில் இடம்பெறும் ஒரு காட்சியில், அந்தக் கொடுமைக்கார போலீஸின் வீட்டில், பின்னணியிலிருந்த நாட்காட்டியில் தீச்சட்டி படம் இடம்பெற்றது.

இந்தத் தவறான சித்தரிப்புக்குப் படத்தின் வசனங்களுக்காக உதவி செய்த எழுத்தாளர் கண்மணி குணசேகரன், தனது கண்டனப் பதிவை முகநூலில் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் தன்னைத் தொடர்பு கொண்ட படத்தின் இயக்குநர், விரைவில் அந்தக் காலண்டரில் இடம்பெற்ற தீச்சட்டி படத்தை சாமி படமாக மாற்றுவதாக உறுதியளித்ததாக, எழுத்தாளர் கண்மணி குணசேகரன் எழுதியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அந்தக் காட்சியில் இடம்பெற்ற நாட்காட்டி படம் சாமி படமாக மாற்றப்பட்டுள்ளது.

x