நவம்பர் 25 தான் தீபாவளி!: ‘மாநாடு’ வில்லன் எஸ்.ஜே.சூர்யா


வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. வருகின்ற தீபாவளியன்று இத்திரைப்படம் திரையரங்கங்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தீபாவளியன்று வெளியாகும் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படத்துக்கு அதிகமான திரையரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால், ‘மாநாடு’ திரைப்படத்தை நவம்பர் 25-ம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்தார்.

இந்நிலையில், இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டர் பதிவில், “8 நாட்களில் முடிக்க வேண்டிய ‘மாநாடு’ டப்பிங் பணிகளை 5 நாட்களில் முடித்திருக்கிறேன். என் நாடி, நரம்பு, கழுத்து, முதுகு, தொண்டை அனைத்தும் போய்விட்டது. 10 நாட்களாவது ஓய்வு வேண்டுமென்று என் உடல் கெஞ்சுகிறது. கடின உழைப்பில் உடல் வலி பின்னுகிறது. ஆனால், படத்தின் இறுதி வடிவைப் பார்த்துவிட்டு ஒன்றைச் சொல்கிறேன். நவம்பர் 25 தான்டா தீபாவளி” என்று கூறியுள்ளார்.

x