நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தின: நடிகர் விஜய்


இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியதுடன், குற்றவாளி போல காட்டியுள்ளதாக வரிவிலக்கு தொடர்பான வழக்கில் நடிகர் விஜய் தனது பதில் மனுவில் தெரியப்படுத்தியுள்ளார்.

நடிகர் விஜய் கடந்த 2012-ம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் ‘கோஸ்ட்’ ரக சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகியபோது, வாகனத்துக்கு நுழைவு வரி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.

இதையடுத்து, காரை இறக்குமதி செய்தபோது இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்கவேண்டும் என விஜய் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்தவேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்கவேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனக் காட்டமாகக் கருத்து தெரிவித்து, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்கக் கோரியும் நடிகர் விஜய் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, நீதிபதியின் கருத்தை நீக்க வேண்டும் என வாதிட்டார். மேலும், விஜய்யின் கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது என்றும் குறிப்பிட்டார். அவர் தன் வாதத்தில், “நுழைவு வரி வசூலிப்பதா வேண்டாமா என்பது 20 ஆண்டுகளாக இருக்கும் பிரச்சனை என்றும், சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும் என்றும், இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்கத் தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டது” என்று தெரிவித்தார்.

விஜய், திரைத் துறையில் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாகவும், அவருக்கு வரி ஏய்ப்பு எண்ணம் ஏதுமில்லை என்றும், மற்றவர்களைப் போல தானும் வழக்கு தொடர்ந்ததாக விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. தன்னை தேச விரோதியாகக் கூறுவது தவறு என்றும், நீதிபதியின் கருத்துகள் வேறு எந்த வழக்கிலும் கூறப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார். வரிவிலக்கு கேட்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது என்றால், அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என்றும் விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தன் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் இதேபோன்று, நடிகர்கள் எனப் பொதுப்படையாகக் கருத்து தெரிவிக்கப்பட்டதாகவும், இந்த கருத்துகள் தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளதுடன், குற்றவாளி போல காட்டியுள்ளதாகவும் விஜய் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.

ஒரு லட்சம் அபராதம் செலுத்துவதில் எந்த பிரச்சினையுமில்லை என்றும், 2 கோடி ரூபாய் செலுத்தத் தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்மறை கருத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்தினார். இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளனர்.

x