நடிகை சுதா சந்திரனிடம் மன்னிப்புக் கேட்ட மத்திய பாதுகாப்பு படையினர்


சுதா சந்திரன்

தமிழ் சினிமாவில் ‘மயூரி’ என்ற திரைப்படத்தின் வாயிலாக, 1984-ல் அறிமுகமானவர் சுதா சந்திரன். பரதநாட்டிய கலைஞரான இவர், 1981-ல் நடந்த சாலை விபத்தில் ஒரு காலை இழந்தார்.

அதன்பின், செயற்கை கால் பொருத்தி நடனக் கலைஞர் கதாபாத்திரத்தில் இவர் நடித்த ‘மயூரி’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துப் புகழ் பெற்றார். ஹிந்தி மற்றும் தமிழ் மொழி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துவருகிறார். இந்நிலையில், வெளியூர் நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டு நேற்று முன்தினம் மும்பை திரும்பினார்.

மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் அதிகாரி, சுதா சந்திரனின் செயற்கை காலை அகற்றிக் காட்டும்படி கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து, தன் சமூக வலைதள பக்கத்தில் நடிகை சுதா சந்திரன், காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த காணொலியில், “செயற்கை கால் உதவியுடன் நடனமாடி வரலாறு படைத்ததுடன், நம் நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளேன். ஆனால், ஒவ்வொரு முறையும் விமானப்பயணம் மேற்கொள்ளும்போது, என் செயற்கை காலை அகற்றிக் காட்டும்படி, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கேட்கின்றனர். பாதுகாப்பு நெறிமுறைகளை மதிக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் செயற்கை காலை அகற்றிக் காட்டக் கோருவது மனமுடையச் செய்கிறது. மிகுந்த அவமானத்துக்கு ஆளாகிறேன். எனவே, விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பாதுகாப்பு சோதனையை எளிதாக்கும் விதமாக, அடையாள அட்டை அல்லது சான்றிதழ் வழங்கப் பிரதமர், ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், நடிகை சுதா சந்திரனிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் நேற்று மன்னிப்பு கோரினர். இது தொடர்பாக, மத்திய தொழில் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது: ‘நடிகை சுதா சந்திரனுக்கு மும்பை விமான நிலையத்தில் ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கோருகிறோம். பாதுகாப்பு நெறிமுறைகளின்படி, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே செயற்கை கால்களை அகற்றிக் காட்ட அறிவுறுத்தப்படும். ஆனால், அந்தப் பெண் அதிகாரி எதற்காக அப்படிக் கூறினார் என்பதை விசாரிக்க உள்ளோம். வரும் நாட்களில் பயணியருக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில் நெறிமுறைகளைப் பின்பற்றி, எங்கள் வீரர்கள் பணிகளை மேற்கொள்வர் என, உறுதி அளிக்கிறோம்’ என்று அப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

x