சூர்ப்பனகை அழகானவள்.. அன்பானவள்!-  நெகிழும் ரெஜினா கசாண்ட்ரா


ரசிகா
readers@kamadenu.in

விஷால் நடிப்பில் கடந்தவாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் ‘சக்ரா’ படத்தில் வில்லியாக நடித்து அதிர வைத்திருக்கிறார் ரெஜினா கசாண்ட்ரா. ‘கிளாமர் குயின்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் ரெஜினா, தமிழ், தெலுங்கில் தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டிருக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மார்ச் 5-ம் தேதி வெளியாகிறது. ‘சக்ரா’வுக்காகக் கிடைத்துவரும் பாராட்டுகள், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ரிலீஸ் என எல்லையற்ற உற்சாகத்தில் இருக்கும் ரெஜினா, காமதேனு மின்னிதழுக்கு அளித்த பேட்டி இது.

கமர்ஷியல் கதாநாயகி என்பதைத் தாண்டி, பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறீர்கள். இது தானாக அமைந்ததா, நீங்களே தேர்வு செய்துகொண்டதா?

இரண்டுமே தான். எனது தோற்றம், திரையிலும் தனிப்பட்ட வாழ்விலும் நான் பின்பற்றும் எனது ஃபேஷன், என்னால் எந்த அளவுக்கு நடிக்க முடிகிறது என இவை எல்லாமே இயக்குநர்களால் கவனிக்கப்படுகிறது என்று நம்புகிறேன். என்னுடைய ‘பொட்டன்சியல்’ என்ன என்பதை, கடந்த 10 ஆண்டுகளாக என்னைக் கவனித்து வந்திருக்கும் இயக்குநர்களால் கண்டறிந்துவிட முடியும். அதனால்தானே அவர்கள் இயக்குநர்கள். இயக்குநர்கள் இல்லாமல், கதாபாத்திரங்களை எழுதும் திரைக்கதாசிரியர்கள் இல்லாமல் எனக்கு இவ்வளவு ‘வெர்சடைல்’ கேரக்டர்கள் கிடைத்திருக்காது.

x