கே.டி (எ) கருப்பு துரை - திரை விமர்சனம்


மரணத்தின் விளிம்பில் இருந்து தப்பிப் பிழைக்கும் முதியவர் எட்டு வயது சிறுவனின் வழிகாட்டுதலில் தன் வாழ்வின் மிச்ச நாட்களை அர்த்தத்துடன் கழிக்கக் கிளம்பும் உயிரோட்டமான பயணமே ‘கே.டி (எ) கருப்பு துரை.’

கோமாவில் கிடக்கும் கருப்பு துரையை (மு.ராமசாமி) பராமரிக்க முடியாமல் அவரது பிள்ளைகள் ‘தலைக்கூத்தல்’ முறை மூலம் கருணைக்(!) கொலை செய்யமுடிவெடுக்கிறார்கள். சொத்தைப் பங்கிட்டுக் கொள்ளவும் திட்டம் தீட்டப்படுகிறது. திடீரென கோமாவில் இருந்து எழும் கருப்பு துரை இவர்களது திட்டத்தை அறிந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறுகிறார். போகும் வழியில் அனாதையான குட்டி எனும் சிறுவனை (நாக விஷால்) சந்திக்கிறார். பிறகு தன் வாழ்வில் எஞ்சியிருக்கும் பத்து ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளக் குட்டியின் உதவியுடன் கிளம்புகிறார். அந்த ஆசைகளை வென்றாரா இல்லையா என்பதுதான் திரைக்கதை.
    
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக எல்லாப் பிரிவு ரசிகர்களும் ரசிக்கத்தக்க ஃபீல் குட் வகைப் படங்கள் இல்லாமல் இருந்த குறையைப் போக்கி இருக்கிறது மதுமிதா எழுதி இயக்கியிருக்கும் கே.டி.    முதியவருக்கும் சிறுவனுக்கும் இடையிலான பிணைப்புதான்  படத்தின் ஆதார சுருதி. அதை உணர்ந்து மு.ராமசாமி, நாகவிஷால் இருவருமே மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அனுபவம் மிக்க நாடகக்காரரான ராமசாமி இந்தப் படத்தில் சினிமாவுக்கு ஏற்ற நடிப்பை கச்சிதமாக வழங்கியிருக்கிறார். நாகவிஷாலும் கதாபாத்திரத்தை முழுமையாக உள்வாங்கி நன்றாக நடித்திருக்கிறார். மட்டன் பிரியாணிக் கடைக்காரராக வருபவர், கூத்துக்கலைஞர் முத்துவாக வருபவர், கருப்புதுரை மீது அன்புகொண்ட ஒரே மகளாக நடித்திருக்கும் பெண் ஆகியோர் நடிப்பால் மனதில் இடம்பிடிக்கிறார்கள்.

படம் தொடங்கும்போது கோமாவில் இருக்கும் கருப்பு துரையின் மன ஓட்டமாக விரியும் காட்சியில் அவரது குரலிலேயே அவரது பின்னணியும் அவர் வாழும் கிராமத்தின் சூழலையும் பதிவு செய்யும் இடத்திலேயே படத்தை ரசிக்கத் தொடங்கிவிட முடிகிறது. இதில், தலைக்கூத்தல் போன்ற கிராமத்து வாழ்வியல் நடைமுறைகளையும் முதியவர்கள் தேவையற்ற சுமைகளாகப் பார்க்கப்படும் பரிதாப நிலையையும் பதிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.

வயதுக்கு மீறிய பேச்சு என்றாலும் குட்டி, கருப்பு துரையை நையாண்டி செய்யும் இடங்களில் திரையரங்கு அதிர்கிறது. இந்த நகைச்சுவையைத் தாண்டி அடிநாதமாக குடும்பத்தால் கைவிடப்பட்ட முதியவருக்கும் குடும்பமே இல்லாத அனாதைச் சிறுவனுக்கும் இடையிலான அன்பும் அன்னியோன்யமும் எதையும் எதிர்பாராத பாசப் பிணைப்பும் மனதை வருடுகின்றன.

x