தெலங்கானாவில் தியேட்டர்களை 2 வாரம் மூட முடிவு


ஹைதராபாத்: பொங்கலுக்குப் பிறகு பெரிய ஹீரோக்கள் நடித்த படங்கள் தெலுங்கில் வெளியாகவில்லை. வெளியான சில சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களும் வரவேற்பைப் பெறவில்லை. இதனால் தெலங்கானா மற்றும் ஆந்திராவில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. குறிப்பாக மல்டிபிளக்ஸ் அல்லாத திரையரங்குகள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன.

மேலும் ஐபிஎல் கிரிக்கெட், மக்களவைத் தேர்தல் காரணமாகவும் திரையரங்குகள் டல்லடிக்கின்றன. இதனால் திரையரங்குகளின் மின் கட்டணம் உள்ளிட்ட அன்றாட செலவுகளுக்கே சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தெலங்கானா மாநில மல்டிபிளக்ஸ் அல்லாத திரையரங்க உரிமையாளர்கள், நாளை முதல் இரண்டு வாரங்கள் திரையரங்குகளை மூட முடிவு செய்துள்ளனர்.