மலேசியா உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டின் இலட்சினை வெளியீடு!

By KU BUREAU

பினாங்கு: மலேசியாவில் உலகத் தமிழ் வம்சாவளி மாநாட்டுக்கான இலட்சினை வெளியிடப்பட்டது.

11ஆம் ஆண்டு உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு, Global Connect Conference, Women Leadership Forum என பன்முக விழாவாக எதிர்வரும் 2025 ஜனவரி 4 & 5 ஆம் தேதிகளில் மலேசிய நாட்டு பினாங்கு மாநிலத்தில் டேவான் ஸ்ரீ அரங்கில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இரு நாட்களும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வில் கலை, கலாச்சாரம், பாரம்பரிய உணவு, உடை திருவிழா, பண்டைய கால தமிழரின் வரலாறு, பன்னாட்டு சிறு, குறுந்தொழில் அதிபர்கள் கருத்தரங்கம் மற்றும் கல்வி, மருத்துவம், பொறியியல், சித்த, ஆயுர்வேத இயற்கை மருத்துவம், உணவு பதப்படுத்துதல் போன்ற பல்வேறு துறை சார்ந்த அரங்கங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.

சிறு, குறுந்தொழில் முனைவோர்களுக்கு என்னென்ன சலுகைகள் இருக்கின்றன என அரசாங்க உதவிகளை அறியும் வகையிலும் இந்த கண்காட்சி அமைய உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வர்த்தக சங்கங்கள், வர்த்தக ஆணையங்கள், வர்த்தகர்கள், தொழில் வாய்ப்புகளை தேடுவோர், ஏற்றுமதி இறக்குமதியாளர்கள் போன்றோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்வில் சாதனை புரிந்த தமிழர்களுக்கு, சாதனைத் தமிழன் விருது, ஆசிரியர்களுக்கு நல்லாசான் விருது, இளம் சிறார்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் திறமை அறிந்து இளம் சிறார் விருது, போன்ற விருதுகளும் இந்நிகழ்வில் நடைபெற உள்ளது. மேலும், பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக பெண்களுக்கு என தனி ஒரு அமர்வும், அவர்கள் எவ்வாறு முன்னேற்ற பாதையில் செல்லலாம் என கருத்துரைக்கவும் உள்ளனர்.

மேலும், இந்த நிகழ்வில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில, மத்திய அமைச்சர்கள், துணைவேந்தர்கள், மேயர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் மலேசியாவில் உற்பத்தி ஆகும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் விதமாக பல்வேறு நாடுகளில் இருந்து வாங்குவோர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்விற்கு தமிழக அரசின் சிறு, குறு மற்றும் மத்திய தொழில் துறை மற்றும் மலேசிய சிறு, குறு மற்றும் மத்திய தொழில் துறையின் ஆதரவும், மலேசிய இந்திய வர்த்தக சங்கத்தின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது. இந்நிகழ்விற்கு மலேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மாநில, மத்திய அமைச்சர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பன்முக விழா பினாங்கு மாநில அரசு ஆதரவுடன் நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டின் இலட்சிணையை பினாங்கு மாநில சட்டமன்ற வளாக அரங்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் வாங் ஹான்வாய், வீட்டு வசதி துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தர் ராஜு, பினாங்கு முதலமைச்சரின் அலுவலக மேலாளர் டத்தின் பாரதி, PCEB தலைமை அதிகாரி திரு அஸ்வின் குணசேகரன், மற்றும் ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வகுமார் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE