ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் விளாடிமிர் புதின் 88 சதவீத வாக்குகளைப் பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
உலகிலேயே மிகப் பெரிய நாடான ரஷ்யா, இந்தியாவை விட பல மடங்கு பெரியதாக உள்ளது. ஆனால், அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை வெறும் 15 கோடி தான். அதிபர் ஆட்சி முறை நடைமுறையில் உள்ள ரஷ்யாவில் ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் ஒரு முறை தேர்தல் நடக்கிறது. அதன்படி இந்த ஆண்டு அதிபர் தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடந்து முடிந்தது.
அதிபர் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில், அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் வென்றதாக தேர்தல் முடிவுகளில் தெரிய வருகிறது. பதிவான வாக்குகளில் 87.8 சதவீதம் வாக்குகள் புதினுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சோவியத் ஒன்றியம் வீழ்ந்தபிறகு ரஷ்யாவில் நடந்த தேர்தலில் ஒருவருக்குக் கிடைக்கும் அதிகபட்ச வாக்குகள் இதுவாகும்.
1999-ல் அதிகாரத்திற்கு வந்த புதின், ரஷ்யாவில் மிகவும் சக்திவாய்ந்த நபராக உருவெடுத்துள்ளார். ரஷ்யா மற்றும் சோவியத் ஒன்றியத்தில் கடந்த 200 ஆண்டுகளில் அதிக காலம் தலைவராக இருந்தவர்கள் பட்டியலில் ஜோசப் ஸ்டாலினை தாண்டியும் புதின் அதிபராக நீடிக்க உள்ளார். .
ரஷ்யாவை பொறுத்தவரை அங்கே ஒரே நபரால் தொடர்ச்சியாக இரண்டு முறை அதிபராக இருக்க முடியாது என்ற விதி இருந்தது. இதன் காரணமாகவே 1999-ல் பதவிக்கு வந்த புதின் 2008-ல் அதிபர் பதவியைத் தனது நண்பர் டிமிட்ரி மெட்வெடேவ் என்பவரிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு முறை மட்டும் பிரதமராக இருந்தார். அதன் பிறகு மீண்டும் 2012-ல் அதிபரான அவர், ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தொடர்ந்து அதிபராக இருக்கலாம் என்று விதியை மாற்றினார்.
மேலும், அதிபரின் பதவிக் காலமும் அப்போது 4 ஆண்டுகளாக இருந்த நிலையில், அது புதின் பிரதமராக இருந்த போது 7 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டது. புதின் சாகும் வரை ரஷ்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே இந்த சட்டத்தைக் கொண்டு வந்ததாக விமர்சிக்கப்படுகிறது.