அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச் சூடு: 22 பேர் பலி, 50 பேர் காயம்

By காமதேனு

அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் லெவிஸ்டனில் நேற்று நடந்த தொடர் துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் காயம் அடைந்துள்ளனர்.

புதன்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து மைனே காவல்துறை மற்றும் கவுண்டி ஷெரிப் இருவரும் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் தாக்குதல் குறித்த விவரங்களை வழங்கவில்லை என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

"லூயிஸ்டனில் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்திக்கொண்டிருக்கிறார். மக்கள் தயவு செய்து வீட்டிற்குள்ளேயே கதவுகளை பூட்டிக்கொண்டு இருங்கள்" என்று மைனே காவல்துறை ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு எச்சரித்துள்ளது.

ஆண்ட்ரோஸ்கோகின் கவுண்டியில் அமைந்துள்ள லூயிஸ்டன், மைனேயில் உள்ள மிகப்பெரிய நகரமான போர்ட்லேண்டிற்கு வடக்கே சுமார் 56 கிமீ தொலைவில் உள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இன்னும் கைது செய்யப்படாத நிலையில், அந்த நபரின் இரண்டு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தாடியுடன் பழுப்பு நிற சட்டை மற்றும் கருப்பு நிற ஜீன்ஸ் அணிந்து இருக்கும் நபர் துப்பாக்கி ஏந்தி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையில், லூயிஸ்டனில் நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மைனேயில் உள்ள அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE