வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை: இதுவரை 97 பேர் பலி; 3 நாட்கள் பொது விடுமுறை

By KU BUREAU

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்ததில் காவல் துறையினர் உள்பட 97 பேர் பலியாகியுள்ளனர். இதனால் இன்று முதல் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் அரசு வேலைக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் அரசின் சுற்றறிக்கையை கடந்த 5-ம் தேதி உயர் நீதிமன்றம் சட்டவிரோதம் என்று அறிவித்தது. இந்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 10-ம் தேதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவை நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் வெடித்தது.

கடந்த 16-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறை காரணமாக 105 பேர் உயிரிழந்தனர். மேலும் 1,500-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். போராட்டம் தீவிரமடைந்ததால் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கல்வி, அரசு வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீடு 7 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 93 சதவீத இடங்கள் தகுதியின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்று அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனால் மாணவர்கள் போராட்டம் ஓய்ந்ததால் இணைய சேவை முடக்கம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.

இதனால் போராட்டக் காரர்களுக்கும், ஆளுங்கட்சியினரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் காவல் துறையினா் உள்பட 97 போ் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக டாக்கா உள்பட பல்வேறு நகர்ப் பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் காலவரையற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

மேலும், வங்கதேசத்தில் இன்று (ஆக.5) முதல் மூன்று நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், சமையல் எரிவாயு, குடிநீா் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு பொது விடுமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவங்கள் காரணமாக டாக்காவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குழு கூட்டம் நேற்று (ஆக.4) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில், “போராட்டம் என்ற பெயரில் நாசவேலைகளில் ஈடுபடுவோர் மாணவர்கள் அல்ல அவர்கள் பயங்கரவாதிகள். அவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE