பெற்றோரிடம் இருந்து குழந்தையை பறிக்க முயன்ற குரங்கு: பதற வைக்கும் வீடியோ

By KU BUREAU

சென்னை: பெற்றோரின் அரவணைப்பில் இருந்த குழந்தையை குரங்கு ஒன்று பறித்து செல்ல முயன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

உலகம் முழுவதும் வனவிலங்குகள் அவ்வப்போது மனிதர்களை தாக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகளும் அவ்வப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மே மாதம் 26ம் தேதி இணையத்தில் பதிவிடப்பட்ட ஒரு வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

வீட்டின் சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சிகளில், குழந்தை ஒன்று தனது பெற்றோருடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருக்கிறது. அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று திடீரென குழந்தையை அவர்களிடம் இருந்து பறித்துச் செல்ல முயன்றுள்ளது. இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அச்சமடைந்து ஓடிய நிலையில் குழந்தையை மீட்க அதன் பெற்றோர் முயன்றுள்ளனர். ஆனால் விடாமல் அந்த குழந்தையை தொடர்ந்து பறித்து செல்வதிலேயே குரங்கு குறியாக இருந்துள்ளது.

மேலும் குழந்தையை மீட்க வந்த பெற்றோரையும் கடித்து காயப்படுத்தியதோடு, அவர்களிடம் இருந்து குழந்தையையும் பறித்துச் செல்ல முயன்றுள்ளது. பெற்றோர் குரங்கிடமிருந்து அந்த குழந்தையை மீட்டு வீட்டிற்குள் எடுத்துச் செல்ல முயன்ற போதும், விடாமல் அந்த குரங்கு அவர்களை துரத்தியுள்ளது. இத்துடன் அந்த வீடியோ காட்சிகள் நிறைவடைந்த நிலையில், அதன் பின்னர் என்ன நேர்ந்தது என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோ காட்சியின் பின்னூட்டத்தில் பலரும் குரங்குகள் மற்றும் விலங்குகள் குழந்தைகளை தாக்கும் வீடியோ காட்சிகளை வெளியிட்டு, இதுபோன்ற சம்பவங்களின் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE