அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி: கத்தியுடன் சுற்றித்திரிந்தவர் மீது துப்பாக்கிச்சூடு!

By KU BUREAU

பென்சில்வேனியா: அமெரிக்காவில் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பை கொலை செய்ய மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கத்தியுடன் சுற்றிரித் திரிந்த ஒருவரை போலீஸார் சுட்டுக் கொன்றுள்ள சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் களத்தில் இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு டொனால்ட் டிரம்ப் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும்போது அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நல்வாய்ப்பாக அந்த சம்பவத்தின் போது, துப்பாக்கி குண்டு காதை கிழித்தபடி சென்றதால் அவர் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக தாமஸ் மேத்யூ குரூக்ஸ் என்ற வாலிபர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அந்நாட்டு நேரப்படி செவ்வாய்க்கிழமை அன்று பென்சில்வேனியா நகரில் நடைபெறும் குடியரசு கட்சியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டொனால்ட் டிரம்ப் வருவதாக இருந்தது. அப்போது முகமூடி அணிந்து கொண்டு கையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவரை திங்கட்கிழமையன்று போலீஸார் கைது செய்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர் ஒருவரை போலீஸார் பிடிக்க முயற்சித்த போது, அவர் தப்பியோடியதால் போலீஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும், வீடு இன்றி தெருவில் வசித்து வந்ததாகவும் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து டிரம்ப் மீது கொலை முயற்சி சம்பவங்கள் நடைபெற்று வருவது, அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE