இஸ்லாமியருக்கு எதிராக வெறுப்பு கருத்து: பாகிஸ்தானில் கிறிஸ்தவருக்கு மரண தண்டனை

By KU BUREAU

முல்டான்: பாகிஸ்தான் நாட்டில் வெறுப்பை பரப்பும் வகையில் சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்ட சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த நருக்கு மரண தண்டனை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிறிஸ்தவரான அந்நபர், இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து பதிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக எஹ்சான் ஷான் என்ற நபருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இஸ்லாமியருக்கு எதிரான கருத்தினை பதிவிட்டதற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதலும் நடத்தப்பட்டது.

ஜரன்வாலா நகரில் அமைந்திருந்த கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் தேவாலயங்களுக்கு தீயிட்டனர். குர்ஆன் நூலின் சில பக்கங்களை கிழித்தது, அதனை தரையில் போட்டு அவமதித்து, மற்ற பக்கங்களில் அவதூறான கருத்தை எழுதிய செயலுக்காக கிறிஸ்தவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

சேதப்படுத்தப்பட்ட குர்ஆன் பக்கங்களை தனது டிக்-டாக் கணக்கு பதிவில் எஹ்சான் ஷான் பகிர்ந்திருந்தார். இதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. அதற்காக அவருக்கு தற்போது பாகிஸ்தான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இதனிடையே இத்தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக எஹ்சான் ஷானின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE