‘வன்முறையை நிறுத்துங்கள்’ : இலங்கை அதிபர் கோத்தபய அறிவுறுத்தல்

By காமதேனு

குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொழும்பில் இலங்கை அரசுக்கு எதிராக எதிராக காலி முகத்திடலில் அமைதியாக நேற்று போராடியவர்கள் மீது மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இலங்கையில் பல்வேறு இடங்களில் மகிந்த ராஜபக்ச குடும்பத்தினரின் வீடு, கட்சி அலுவலகம், இலங்கையின் ஆளுங்கட்சியினரின் வீடுகள் மற்றும் வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற வன்முறையில் 7 பேர் பலியாகியுள்ளனர். 231 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 5 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச ட்விட்டரில் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “ அரசியல் சார்புகளைப் பொருட்படுத்தாமல், குடிமக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்தவும், அமைதியாக இருக்கவும் மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், “ அரசியல் ஸ்திரத்தன்மையை ஒருமித்த கருத்து மூலம், அரசியலமைப்பு ஆணையிற்குள் மீட்டெடுக்கவும், பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE