கியாஸ் பிளாக்மெயில்: உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எரிவாயு அனுப்ப மறுக்கும் ரஷ்யா!

By காமதேனு

உக்ரைன் போரின் பின்விளைவுகளைப் பிற நாடுகள் ஏற்கெனவே உணரத் தொடங்கியிருக்கின்றன. தற்போது உக்ரைனின் அண்டை நாடான போலந்து ரஷ்யாவின் கோபப் பார்வைக்கு இலக்காகியிருக்கிறது. ரஷ்யாவின் மிகப் பெரிய எரிவாயு உற்பத்தி நிறுவனம் உள்ளிட்ட 50 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்திருக்கிறது போலந்து. இதையடுத்து, அந்நாட்டுக்கான எரிவாயு விநியோகத்தை அதிரடியாக நிறுத்தியிருக்கிறது ரஷ்யா.

யமால் எரிவாயுக் குழாய் வழியே போலந்துக்கு எரிவாயு அனுப்புவதை ரஷ்யா நிறுத்திவிட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருக்கிறது. கூடவே, பல்கேரியாவுக்கும் இதேபோல எரிவாயு விநியோகத்தை விரைவில் நிறுத்த திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம், எரிசக்தி விநியோகத்தை முன்வைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் ஒர் எச்சரிக்கையை விடுத்திருக்கிறார் புதின். ரஷ்யாவின் எரிசக்தி நிறுவனமான ‘காஸ்ப்ரோம்’ நிறுவனத்துடனான பரிவர்த்தனையை ரூபிள் கரன்ஸி மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று ரஷ்யா கூறியிருந்த நிலையில் அதை ஏற்க போலந்து, பல்கேரியா ஆகிய நாடுகள் மறுத்துவிட்டதும் புதின் அரசின் இந்நடவடிக்கைக்குக் காரணம்.

இது தனது நட்பு நாடுகளுக்கு இடையிலான ஒற்றுமையைக் குலைக்கும் முயற்சி எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறது உக்ரைன். எரிசக்தி வளத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கும் உக்ரைன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒன்றிணைந்து நின்று ரஷ்யாவின் எரிசக்தி வளம் மீது தடைகளை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE