நேட்டோவில் சேர விருப்பமில்லை: ஸெலன்ஸ்கியின் ஏமாற்றத்துக்கு என்ன காரணம்?

By சந்தனார்

நேட்டோவில் சேர அழுத்தம் கொடுக்கப்போவதில்லை என்றும், ரஷ்யாவால் சுதந்திர நாடுகளாக அறிவிக்கப்பட்ட டோனெட்ஸ் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்கள் குறித்து சமரசம் செய்துகொள்ளத் தயார் என்றும் ஏபிசி நியூஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கூறியிருக்கிறார்.

உக்ரைன் நேட்டோவில் சேர விரும்பியதை ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லித்தான் இந்தப் போரைத் தொடங்கினார் ரஷ்ய அதிபர் புதின். அதேபோல், உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்பு, அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் அதிகம் வசிக்கும் டோனெட்ஸ் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்களை சுதந்திர நாடுகளாக அங்கீகரிப்பதாக புதின் அறிவித்தார். இந்நிலையில் ஸெலன்ஸ்கியின் இந்தப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.

2014-ல் புதினின் படைகள் உக்ரைனின் க்ரைமியா பகுதியை ரஷ்யாவுடன் இணைத்த நிகழ்வைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏதேனும் ஓர் அமைப்பில் சேர்ந்துகொள்ள வேண்டும் என உக்ரைன் கருதியது. நேட்டோவில் சேர உக்ரைன் ஆர்வம் காட்டுவதை அறிந்த புதின் கோபமடைந்தார். உக்ரைனில் நேட்டோ படைகள் இருப்பது ரஷ்யாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறினார். அதற்கு வலுவான காரணமும் இருக்கிறது.

இன்றுவரை நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்க்கப்பட்டுவிடவில்லை. அத்துடன், இந்தப் போரில் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட நேட்டோ முன்வரவும் இல்லை.

1949-ல் 12 நாடுகளுடன் தொடங்கப்பட்ட நேட்டோ அமைப்பு, அவ்வப்போது விரிவாக்கம் செய்துவருகிறது. உண்மையில், சோவியத் ஒன்றியத்திடமிருந்து ஐரோப்பாவைக் காப்பதற்காகவே உருவாக்கப்பட்ட அமைப்பு நேட்டோ. முதலாம் உலகப்போர் முடிந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட வெர்சைல்ஸ் உடன்படிக்கை மூலம் ஜெர்மனிக்குக் கடும் நிபந்தனைகள் தரப்பட்டதுபோல, நேட்டோ படைகளின் விரிவாக்கம் தங்களுக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என ரஷ்யா கருதுகிறது. 1990-களின் இறுதியில் கிழக்கு நோக்கி நேட்டோவில் விரிவாக்கம் செய்ய அமெரிக்கா முடிவெடுத்தபோது ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.

1997-ல், ரஷ்யாவுக்கும் நேட்டோ அமைப்புக்கும் இடையில் ஃபவுண்டிங் ஆக்ட் எனும் பெயரில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறித்தான் இந்த விரிவாக்கத்தை நேட்டோ மேற்கொண்டது. 1998-ல் இதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தபோதே, இது மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டது. 1999-ல் மத்திய ஐரோப்பிய நாடுகளான போலந்து, ஹங்கேரி, செக் குடியரசு ஆகியவை நேட்டோவில் இணைக்கப்பட்டபோது ரஷ்யா அதைக் கண்டித்தது. அதன் பின்னரும் பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா உள்ளிட்ட கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகள் நேட்டோவில் சேர்க்கப்பட்டன. அந்த வரிசையில், நேட்டோவில் சேர உக்ரைன் முயற்சித்தது புதினை ஆத்திரப்படுத்தியது.

2014-ல் க்ரைமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்டதைத் தொடர்ந்து, நேட்டோ போன்ற ஓர் அமைப்பில் சேர்வது பாதுகாப்பளிக்கும் என்று கருதிய உக்ரைன் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. நேட்டோவில் உக்ரைனைச் சேர்த்துக்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் ஸெலென்ஸ்கி வலியுறுத்திவந்தார்.

அதேவேளையில் எல்லைப் பிரச்சினைகளைக் கொண்ட உக்ரைனைச் சேர்த்துக்கொள்ள நேட்டோ தயக்கம் காட்டுவதாகச் செய்திகள் வெளியாகின. இன்றுவரை நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்க்கப்பட்டுவிடவில்லை. அத்துடன், இந்தப் போரில் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிட நேட்டோ முன்வரவும் இல்லை. நேட்டோவில் அங்கம் வகிக்கும் நாடுகள் உக்ரைனுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளையும், ஆயுதங்களையும் வழங்கிவருகின்றன.

உக்ரைனை ஏற்றுக்கொள்ள நேட்டோ தயாராக இல்லை என்பதை முன்பே உணர்ந்துவிட்டதாக இந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருக்கும் ஸெலன்ஸ்கி, சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்தும் ரஷ்யாவுடன் மோதுவது பற்றியும் நேட்டோவுக்கு அச்சம் இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார். ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ போரில் இறங்கினால், தங்கள் உறுப்பு நாடுகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தும் என நேட்டோ கருதுகிறது. மோதலை உருவாக்குவதல்ல, மோதலைத் தவிர்ப்பதே நோக்கம் என்கிற அடிப்படையில் அந்த அமைப்பு இயங்கிவருகிறது. அதேசமயம் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதில் நேட்டோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தீவிரம் காட்டுகின்றன.

அதேபோல், டோனெட்ஸ் மற்றும் லுஹான்ஸ்க் பிரதேசங்களைச் சுதந்திர நாடுகள் என உக்ரைனும் அங்கீகரிக்க வேண்டும் என்று புதின் விரும்புகிறார். இந்தச் சூழலில், இதுகுறித்து பேசிய ஸெலன்ஸ்கி, “இந்த இரண்டு போலி குடியரசுகளும் ரஷ்யாவைத் தவிர வேறு யாராலும் அங்கீகரிக்கப்படவில்லை. எனினும், இந்தப் பிரதேசங்கள் நீடிப்பது குறித்து நாம் விவாதித்து, சமரசம் தேட முயற்சிக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

ரஷ்ய அதிபர் புதின்

இந்தப் போரின் மூலம், நேட்டோவில் சேரும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு, ரஷ்யா தலைமையில் இயங்கிவரும் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு (சிஎஸ்டிஓ) அமைப்பில் சேர உக்ரைனுக்கு புதின் அழுத்தம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது நேட்டோவில் சேரும் விருப்பத்தை உக்ரைன் கைவிட்டிருப்பதைத் தொடர்ந்து இவ்விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE