இறுதிக்கட்டத்தை நெருங்கும் ஈரான் அணு ஒப்பந்தம்!

By காமதேனு

ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பாக ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடந்துவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் நாடுகள், ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு அணுக்கமான நிலைக்கு வந்திருக்கின்றன என ஈரான் தரப்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் அலி பகேரி தெரிவித்திருக்கிறார்.

ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதைத் தடுக்கும் நோக்கில் ஈரான் அணு ஒப்பந்தம் 2015-ல் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி அணு ஆயுதங்களைத் தயாரிப்பதில்லை என்று ஈரான் ஒப்புக்கொண்டது. இதையடுத்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக்கொள்ள ஆறு நாடுகளும் ஒப்புக்கொண்டிருந்தன. 2016-ல் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தமும், அதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்டதும் பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து ஈரானை மீட்டெடுத்தன. எனினும், ஒபாமா காலத்தில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்திலிருந்து, ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு 2018-ல் வெளியேறியது. இதனால் அதிருப்தியடைந்த ஈரான், விரிவான கூட்டு செயல் திட்டத்தை (ஜேசிபிஓஏ) மீறி அணு ஆயுதங்களைத் தயாரிக்கத் தொடங்கியது.

இந்நிலையில், ஈரானை மீண்டும் அணு ஆயுத ஒப்பந்தத்துக்குள் கொண்டுவரும் முயற்சிகள் நடந்துவருகின்றன. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதைத் தொடர்ந்து இதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. 2021 ஏப்ரல் மாதம் முதல் இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கிய நிலையில், தற்போது வியன்னாவில் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்துவருகின்றன. இதில், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.

இதுதொடர்பாக ட்வீட் செய்திருக்கும் அவர், “எல்லா நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாது. பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் நாடுகள் நடைமுறைக்கேற்ப நடந்துகொள்ள வேண்டும், உறுதியற்ற தன்மையைத் தவிர்க்க வேண்டும். மேலும், கடந்த 4 ஆண்டுகளில் கிடைத்த பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும். அந்நாடுகள் முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய தருணம் இது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE