குடும்பத்தாரோடு ரகசிய இடத்தில் பதுங்கினார் கனடா பிரதமர்!

By காமதேனு

கனடாவில் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக வலுக்கும் போராட்டத்தை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினருடன் ரகசிய இடத்தில் பதுங்கியுள்ளார்.

அண்டை தேசமான அமெரிக்காவில் கரோனா தொற்று உச்சம் அடைந்திருப்பதை தொடர்ந்து, அதன் பரவல் பாதிக்காது இருப்பதற்காக கனடா, பல்வேறு கரோனா கட்டுப்பாடுகளை அதிகரித்திருக்கிறது. இதற்கு மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

கரோனாவில் பொது இடங்களில் நடமாடுவோர் மற்றும் பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு, கரோனா தடுப்பூசி சான்றிதழ் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இதனால் கரோனா தடுப்பூசிக்கு எதிராக போராடும் குழுவினருக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. மேலும், அமெரிக்க-கனடா எல்லையை கடந்து வருவோருக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்தது. வாகன ஓட்டுநர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் என்றும், அவ்வாறு தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வார காலத்துக்கு தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவும் உத்தரவானது. இதற்கு கனரக வாகன ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

ஒட்டாவா போராட்டம்

தங்கள் எதிர்ப்பின் அடையாளமாக வாகனங்களுடன் நாட்டின் தலைநகர் ஒட்டாவாக்குள் நுழைந்து போராடுவது எனவும் அறிவித்தனர். அதன்படி சனிக்கிழமை சாரிசாரியாக கனரக வாகனங்கள் தலைநகருக்குள் நுழைய ஆரம்பித்தனர். போலீஸார் கணித்ததைவிட அதிகமான வாகனங்களும், அவற்றில் குடும்பத்தோடு போராட்டக்காரர்களும் நுழைந்ததை அடுத்து பாதுகாப்பு அச்சம் சூழ்ந்தது.

இதன் அடிப்படையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் குடும்பத்தினர் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார்கள். தலைநகருக்குள் நுழைந்தவர்கள், போர் நினைவகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களில் ஊடுருவி, முழக்கமிடுவது, நடனமாடுவது ஆகியவற்றை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கனரக வாகனங்கள் தலைநகருக்குள் நுழைவது அதிகரித்ததாலும், அவர்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருந்ததாலும் சட்டம் ஒழுங்கு குறித்து போலீஸார் கவலை கொண்டுள்ளனர். அதிகரிக்கும் போராட்டக்காரர்களால் கனடா தலைநகர் ஒட்டாவாவில் பதட்டம் சூழ்ந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE