தேர்தலை சீர்குலைக்கும் டிஜிட்டல் யுகம்!

By காமதேனு

அடுத்த ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதில் அந்நிய சக்திகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் மறைமுகத் தலையீடுகளுக்கான சாத்தியம் அதிகரித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துக்குப் பொதுவான சட்டங்களை உருவாக்குதல், முடிவுகளைச் செயல்படுத்துதல், அன்றாட நடவடிக்கைகள் கவனித்தல் ஆகியவையே இந்த ஐரோப்பிய ஆணையத்தின் பொறுப்புகள். இப்போது இந்த அமைப்பே ஐரோப்பிய தேர்தல்களில் அந்நிய நாடுகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தலையிட்டு முடிவுகளைத் தாங்கள் விரும்பியபடி மாற்றியமைக்க முயலலாம் என எச்சரித்திருப்பது ‘கேம்பிரிட்ஜ் அனாலிடிகா’ விவகாரத்தின் போது எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு வலு சேர்க்கின்றன.

சில மாதங்களுக்கு முன் கேம்பிரிட்ஜ் அனாலிடிக்கா நிறுவனம் ஃபேஸ்புக் பயனர்களின் தகவலைத் திருடியது. அதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் மற்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைத் தங்கள் உதவியை நாடிய தரப்பினருக்கு சாதகமாக மாற்ற முயன்றது அனாலிடிக்கா.

இந்த கேம்ப்ரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் தேர்தல்களில் அந்நிய சக்திகளின் தலையீடு குறித்த எச்சரிக்கை மணி என்று கூறியுள்ள ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய அரசுகள் எடுக்க வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE