சென்னை: மாநிலங்களுக்கு இடையே பிரிவினைவாதத்தை திமுக தூண்டுவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, "நீட் தேர்வு 2013-ம் ஆண்டு மே மாதமே ஆரம்பிக்கட்டுவிட்டது. ஆனால் பிரதமர் மோடி 2014-ல் தான் ஆட்சிக்கு வந்தார். எனவே அதற்கு முன்பே எல்லாமே இருந்திருக்கிறது.
அப்படி இருக்கையில் எப்படி பாஜக மாநில உரிமையை பறிக்க முடியும். அதிமுக ஆட்சியில் மும்மொழிக் கொள்கையை பற்றி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உறுப்பினர் சட்டப்பேரவையில் பேசுகையில், தமிழகத்தில் தெலுங்கு பேசுபவர்கள் அதிகமாக உள்ளனர். அதனால் தெலுங்கு பள்ளிக்கூடம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதிலளித்த அப்போதைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா, தெலுங்கிலேயே பேசி பார்க்கலாம் என தெரிவித்தார்.
அந்த வகையில் தமிழகத்தில் தெலுங்கு, மலையாளம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அதனால் மும்மொழிக் கொள்கையில் ஏதாவது ஒரு இந்திய மொழியை சேர்த்து படித்தால் போதுமானது என்பதை தான் தேசிய கல்விக்கொள்கை கூறுகிறது. அதேபோல் ஜிஎஸ்டி காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது.நடைமுறைபடுத்தியது தான் பாஜக.
» காளையார்கோவில் இளைஞர் கொலை: பணி நீக்கப்பட்ட காவலர் உட்பட 4 பேர் கைது
» காட்டுமன்னார்கோவில் அருகே சோகம்: ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
ஜிஎஸ்டியை பொறுத்தவரை ரூ.1 என்பதில் ஏற்கெனவே 50 பைசா மாநில அரசுக்கு சென்று விடுகிறது. மீதமுள்ள 50 பைசாவில் 29 பைசா மீண்டும் மாநில அரசுக்கு தான் செல்கிறது. ஆனால் இதை மறைத்து ஒரு ரூபாய்க்கு 29 பைசா மட்டுமே மாநில அரசுக்கு கிடைப்பதாக சொல்கின்றனர்.
அந்தவகையில் மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்கிற பிரிவினைவாதத்தை தான் தூண்டுகிறார்களே தவிர, இந்திய அரசு ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்தியா வல்லரசாக நாடாக மாற வேண்டும் என்ற எண்ணம் முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை. தனித் தமிழ்நாடு வேண்டும், தனிக் கொடி வேண்டும் என்று மட்டுமே அவர் நினைக்கிறார். நம் நாடு வல்லரசாக மாற வேண்டும் என்றால், அனைத்து மாநிலங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
தேர்தலுக்கு இன்னும் ஒராண்டுகளே இருக்கும் நிலையில் தேர்தலையொட்டி, ஏதாவது ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை மனதில் கொண்டு மாநில சுயாட்சியை வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்துள்ளனர். இது மக்களுக்கு விரோதமானது. தேசத்துக்கு விரோதமானது. மக்கள் இதை சிந்தித்து பார்த்து வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.