மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு: உணவுகளை மாற்றி வழங்க பரிந்துரை

By KU BUREAU

மதுரை: உடல்நலக் குறைவு காரணமாக, மீனாட்சி அம்மன் கோயில் யானைக்கு உணவுகளை மாற்றி வழங்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான பார்வதி என்ற 29 வயது நிரம்பிய பெண் யானை, கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பார்வதி யானையின் இடது கண்ணில் கண்புரை நோய் ஏற்பட்டு, தாய்லாந்து மற்றும் தமிழக கால்நடைத் துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதனால், பார்வதி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளது.

இந்நிலையில், சில வாரங்களாகவே யானை உடல் நலமின்றி இருந்தது. சிகிச்சை அளித்த சென்னை, மதுரை கால்நடை மருத்துவர்கள் சில மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கியுள்ளனர். அதன்படி, கோடை காலத்துக்கு ஏற்ப உணவுகளை மாற்றி வழங்கவும், பழங்களை அதிகளவில் கொடுக்கவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தற்போது, பார்வதி யானை நலமாக உள்ளது. இருப்பினும், தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE