சென்னை: இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதிராஜா மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார். மனோஜ் பாரதிராஜாவின் வாழ்க்கை பயணம் இதோ...
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்ற இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. இவர் 1976ம் ஆண்டு செப்டம்பர் 11ல் பிறந்தார். அமெரிக்காவின் தெற்கு புளோரிடாவில் உள்ள பல்கலைக் கழகத்தில் நாடகக்கலை படித்து வந்த இவர் , 1999-ம் ஆண்டு வெளியான 'தாஜ் மஹால்' திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கினார். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் பெரும் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து,
கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம், சமுத்திரம், அன்னக்கொடி, ஈஸ்வரன், மாநாடு என பல படங்களில் நடித்தார். கடைசியாக விருமன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
'சாதுரியன்' என்ற படத்தில் நடிக்கும்போது, அதில் நாயகியாக நடித்த மலையாள நடிகை நந்தனாவை காதலித்த மனோஜ் பாரதிராஜா, பெற்றோர் சம்மதத்துடன் அவரை 2006-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மதிவதனி, அர்த்திகா என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளன.
இயக்குநராக வேண்டும் என்ற ஆசையில் இருந்த அவர், இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். அதேபோல ஷங்கரின் எந்திரன் படத்திலும் அவரின் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர், 2023-ல் 'மார்கழி
திங்கள்' என்ற படத்தை இயக்கினார். இதில் பாரதிராஜாவும் நடித்திருந்தார்.
» கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு எரிசாராயம் கடத்த முயன்ற இருவர் கைது: ஓசூரில் 7,525 லிட்டர் பறிமுதல்
» மனோஜ் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி; பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறினார்
தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்த மனோஜுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இருதய பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், மாரடைப்புக் காரணமாக நேற்று அவர் திடீரென மரணமடைந்தார். அவர் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மனோஜின் உடல், சென்னை சேத்துபட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. உடலுக்கு உறவினர்கள், திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் அடையாளமாகவும், தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்துக்கும் கொண்டு சென்ற பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூற முடியாமல் பல திரையுலக பிரபலங்கள் இன்று கண்கலங்கி நிற்கின்றனர்.