தமிழகத்தில் பொது தேவைகளுக்கு நிலம் கையகப்படுத்தியதற்காக தர வேண்டிய இழப்பீட்டு தொகை ரூ.1522 கோடி நிலுவை

By KU BUREAU

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் பொது தேவைகளுக்காக நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,521.83 கோடி இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக உயர் நீதிமன்ற பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ராணிப்பேட்டையில் பெல் நிறுவனத்தின் ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை எனக்கூறி சந்திரசேகர், சேட்டு ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழகம் முழுவதும் நிலம் கையகப்படுத்தப்பட்ட வழக்குகளில் இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்கு விவரங்களை சமர்ப்பிக்க கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் ரூ.760 கோடி இழப்பீடு வழங்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, நிலத்தை பொது தேவைகளுக்காக கையகப்படுத்திய பிறகு இழப்பீடு கோரும் நில உரிமையாளர்களை மத்திய, மாநில அரசுகள் பிச்சை பாத்திரத்துடன் நிற்கச் செய்துவி்ட்டதாக அதிருப்தி தெரிவித்திருந்தார். மேலும், இழப்பீடு கோரும் நிலுவை வழக்குகளின் தற்போதைய விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும், என உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற பதிவுத்துறை தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்காக மொத்தம் ரூ.1,521.83 கோடி இழப்பீடு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த இழப்பீட்டுத்தொகையை வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக்கோரி தமிழகம் முழுவதும் 1,222 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதேபோல புதுச்சேரியில் ரூ.35.78 கோடி இழப்பீடு வழங்கப்படாமல் உள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்தக் கோரி 59 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதையடுத்து நீதிபதி பெரும்தொகை இழப்பீடாக வழங்கப்பட வேண்டியுள்ளதால் இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு தலைமை வழக்கறிஞர் உதவ வேண்டும், எனக்கூறி விசாரணையை வரும் மார்ச் 21-க்கு தள்ளி வைத்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE