தமிழக மீனவர்கள், படகுகளை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

By கி.கணேஷ்

சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள், படகுகளை விடுவிக்க தூதரக ரீதியான வலுவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (மார்ச் 18) எழுதிய கடிதத்தின் விவரம்: இந்த 2025 ம் ஆண்டின் மூன்று மாதங்களுக்குள் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் 10-வது சம்பவத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று மார்ச் 17ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற மூன்று மீனவர்களை, அவர்களது மீன்பிடி விசைப்படகுடன் இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளது வேதனையளிக்கிறது.

பாரம்பரிய மீன்பிடிப் பகுதியில் நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க வலுவான தூதரக முயற்சிகள் தேவை என்று பலமுறை தான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்ட போதிலும், இதுபோன்ற கவலையளிக்கக்கூடிய சம்பவங்களின் எண்ணிக்கை தொய்வின்றி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்கு மீன்பிடித் தொழிலையே பெரிதும் நம்பியுள்ளனர். இலங்கைக் கடற்படையினரால் அடிக்கடி இதுபோன்று சிறைபிடிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தினர் வறுமையின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, தமிழக மீனவர்கள் மேலும் கைது செய்யப்படாமல் தடுக்கவும், இலங்கை சிறைக் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 110 மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க வலுவான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அதில் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE