மதுரை: பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகம் அதிமுக ஆட்சியில் கட்டத் தொடங்கி, தற்போது திமுக ஆட்சியிலும் தொடரும் நிலையில் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததால் தற்போது வரை திறக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மாநகராட்சிக்கு மாதந்தோறும் ரூ.7 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சுற்றுலா நகரான மதுரையில் கடந்த காலத்தில் ரயில் நிலையம் அருகே பெரியார் பேருந்து நிலையம், காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் ஆகிய 2 பேருந்து நிலையங்கள் செயல்பட்டன. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த 2 பேருந்து நிலையங்களையும் இடித்துவிட்டு ஒருங்கிணைந்த பேருந்து நிலையமாக கட்ட முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.174 கோடியில் பேருந்து நிலையத்துடன் இணைத்து 474 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும் தனியார் ‘மால்’ போன்று கட்டப்பட்டுள்ளது.
இங்கு 100-க்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தக்கூடிய இட வசதியுடன் அண்டர் கிரவுண்ட் பார்க்கிங்கும் அமைக்கப்பட்டுள் ளது. இங்குள்ள கடைகளை ஏலம் விட்டு வியாபாரிகள், பொதுமக்கள் வர ஆரம்பித்தால் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.7 கோடி வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், தற்போது வரை இது திறக்கப்படாததால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
தற்போது இந்த வணிக வளாகத்தின் கட்டுமானப்பணி வர்ணம் பூசப்பட்ட நிலையில் மின்சாரப் பணிகள், எக்ஸ்லேட்டர் உள்ளிட்ட பிற பணிகள் நடந்து வருகின்றன. இங்குள்ள கடைகள் ஒதுக்கீட்டில் பழைய பெரியார் பேருந்து நிலைய வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும், மீதமுள்ள கடைகளை வெளிப்படையாக பொது ஏலம் விடவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. ஆனால், தற்போது வரை அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பேருந்து நிலையம் வணிக வளாகம், அதிமுக ஆட்சியில் கட்டத் தொடங்கி, தற்போது திமுக ஆட்சியிலும் தொடர்கிறது. அடுத்த சட்டப்பேரவை தேர்தல் வர உள்ளநிலையில் இன்னும், பெரியார் பேருந்து நிலைய வணிக வளாகம் திறக்கப்படவில்லை.
» ஆன்லைன் மூலம் ரசாயன உரங்கள் வாங்கினால் மகசூல் இழப்பு ஏற்படும்: வேளாண் இயக்குநர் எச்சரிக்கை
» பாலியல் குற்றங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: தவாக தலைவர் வேல்முருகன் வலியுறுத்தல்
இது குறித்து மாநகராட்சி சிலர் கூறுகையில், ”ஒப்பந்ததாரர் பணி குறைபாடுகளாலேயே இந்த வணி வளாகம் திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மீனாட்சி அம்மன் கோயில் கோபுர உயரத்துக்கு மேல் எந்த கட்டிடமும் கட்டக்கூடாது என்ற விதி முறை மதுரையில் உள்ளது. அதனைப் பின்பற்றி, இந்த வணிக வளாகத்துக்கு கட்டிட வரைப்பட அனுமதி வாங்குவதில் ஒரு ஆண்டு சிக்கல் நீடித்தது. தற்போது அந்த அனுமதி கிடைத்துள்ளது. ஆனால், தற்போது வரை மின் இணைப்பு பெறப்படவில்லை. அதற்கான பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
மேலும், இந்த வணிக வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட கடைகள், பொதுமக்கள் வருகை அதிகமாக இருப்பதால் தமிழ்நாடு அரசு மாசு கட்டுப் பாட்டு வாரியத்திடம் சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த அனுமதி தற்போது வரை கிடைக்கவில்லை. அதை பெறுவதற்கான பணிகள் நடக்கின்றன. சமீபத்தில் இந்த வணிக வளாகத்தை ஆணையர் சித்ரா பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்” என்றனர்.
இது குறித்து மாநகராட்சி மேயர் இந்திராணியிடம் கேட்டபோது, ”வணிக வளாகப் பணி 99 சதவீதம் முடிந்துள்ளது. மிக விரைவில் திறக்கப்பட உள்ளது. எந்த சிக்கலும் இல்லை” என்றார்.