உதகை: பெண்ணை தாக்கி கொன்ற வனவிலங்கை பிடிக்க காலிபெட்டாவில் வனத்துறையினர் கூண்டு மற்றும் 20 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பேரார் பொம்மன் நகரைச் சேர்ந்த கோபால் மனைவி அஞ்சலை (50). இவர் நேற்றுமுன்தினம் தேயிலை பறிக்க அருகே உள்ள காலிபெட்டா என்ற பகுதிக்குச் சென்ற நிலையில் மாலையில் வீடு திரும்பவில்லை. அஞ்சலையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அரக்காடு அருகே உள்ள காலிபெட்டா பகுதியில் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டபோது, மர்ம விலங்கால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் பெண் ஒருவரின் சடலத்தை கண்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதகை வடக்கு வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் போலீஸார் உடலை மீட்டு ஆய்வு செய்தனர். இதில் உயிரிழந்து கிடந்தது அஞ்சலை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த அஞ்சலை குடும்பத்தினரிடம் வனத்துறையினர் முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கினர்.
» பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி: இந்தி எதிர்ப்பு விவகாரம் திகுதிகு!
» தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைக்கிறது திமுக? - வேளாண் பட்ஜெட் பற்றி அண்ணாமலை சாடல்!
இந்நிலையில், அஞ்சலையை தாக்கிக் கொன்ற வனவிலங்கை பிடிக்க காலிபெட்டா பகுதியில் வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். மேலும், விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் வனத்துறையினர் அருகில் உள்ள பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம், வன விலங்கு நடமாட்டம் குறித்து தெரிவித்து, மாணவர்கள் தனியாக வர வேண்டாம் என அறிவுறுத்தினர். மேலும், கிராம மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.