சென்னை: ராமேசுவரத்தில் புதிய விமான நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் தூத்துக்குடி விமான நிலையங்களின் விரிவாக்கத்துக்கு உரிய நிலங்களை கையகப்படுத்தி ரூ.2,938 கோடி மதிப்புள்ள நிலத்தை இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. சேலம் விமான நிலையத்துக்கான ரூ.350 கோடி மதிப்புள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னைக்கு அருகே பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தென் தமிழகத்துக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கவும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்காகவும் ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும்.
தமிழரின் கடல் மரபை மீட்கவும், தமிழகத்தை உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக நிறுவவும், தமிழ்நாடு கடல் போக்குவரத்து உற்பத்திக் கொள்கை ஒன்றை அரசு அறிமுகப்படுத்தும். கப்பல், படகு வடிவமைப்பு மற்றும் கப்பல் இயந்திர உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடு மற்றும் புத்தாக்கத்தை இக்கொள்கை ஊக்குவிக்கும். இத்தொழில் வருகை மூலம் கடலூர் மற்றும் தூத்துக்குடியில் 30 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
உயிரி தொழில்நுட்ப சூழலமைப்பை ஊக்குவிக்கவும், உயிரியல் மருந்து மற்றும் நோய்த் தீர்வியல் போன்ற வளர்ந்து வரும் துறைகளில் தமிழகத்தை முன்னிலைப்படுத்தவும் சென்னைக்கு அருகில் அதிநவீன உயிர் அறிவியல் பூங்கா உருவாக்கப்படும்.