உதகை: பெண்ணை வன விலங்கு தாக்கி கொன்ற காலிபெட்டாவில் மர்ம விலங்கை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து, 20 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பேரார் பொம்மன் நகரை சேர்ந்த கோபால் என்பவரது மனைவி அஞ்சலை(50). இவர் நேற்று தேயிலை பறிக்க அருகே உள்ள காலிபெட்டா என்ற பகுதிக்கு சென்ற நிலையில் மாலையில் வீட்டிற்கு திரும்பவில்லை. இதையடுத்து இரவு வரை அஞ்சலையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில், அரக்காடு அருகே உள்ள காலிபெட்டா பகுதியில் ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டபோது பெண் ஒருவரை வனவிலங்கு தாக்கி கொன்று தேயிலை தோட்டத்துக்குள் இழுத்து சென்று கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சாப்பிட்டு இருப்பதை கண்டனர். இதுகுறித்து உடனடியாக உதகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டது.
» சிறுபான்மை சமூகத்தின் எதிர்ப்பார்ப்பை சுக்குநூறாக நொறுக்கிய பட்ஜெட்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு
» ஆண் பிள்ளைகளை இப்படி வளர்த்தால் இந்த சமூகம் நிச்சம் மாறும்: கனிமொழி எம்.பி பேச்சு
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த உதகை வடக்கு வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் போலீஸார் உடலை மீட்டு ஆய்வு செய்தனர். இதில் பிணமாக கிடந்தது நேற்று மாயமான அஞ்சலை என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த அஞ்சலை குடும்பத்தினரிடம் வனத்துறையினர் முதல் தவணையாக ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்கினர். இந்நிலையில், காலிபெட்டா பகுதியில் மர்ம விலங்கை பிடிக்க அப்பகுதியில் வனத்துறையினர் இன்று கூண்டு வைத்தனர். மேலும், விலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்க 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
மாவட்ட வன அலுவலர் கவுதம் தலைமையில் வனத்துறையினர் அருகில் உள்ள பள்ளிக்கு சென்று மாணவர்களிடம் விலங்கு நடமாட்டம் குறித்து தெரிவித்து, மாணவர்கள் தனியாக வர வேண்டாம் என அறிவுறுத்தினர். மேலும், கிராம மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.