ஈரோடு: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நடந்த ஏலத்தில், கொப்பரை கிலோ ரூ.160-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை கூட்டுறவு சங்கத்தில் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் நடக்கும் கொப்பரை ஏலத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கொப்பரை விற்பனையாகி வருகிறது. தீபாவளி பண்டிகையை ஒட்டி கொப்பரை விலை கணிசமாக உயர்ந்தது. ஜனவரி மாதம் 1-ம் தேதி அதிகபட்சமாக ரூ.153-க்கு விற்பனையானது. இந்நிலையில் கடந்த 8ம் தேதி நடந்த ஏலத்தில் முதல்தர கொப்பரை அதிகபட்சமாக ரூ.154.89-க்கு விற்பனையானது.
இந்த விலை உயர்வு மேலும் அதிகரித்து, நேற்று முன் தினம் (12-ம் தேதி) கிலோ ரூ.160-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டது. ஏலத்தில், மொத்தம் 2,657 மூட்டை கொப்பரை வரத்தானது. இதில், முதல் தர கொப்பரை குறைந்த பட்சம் கிலோ ரூ.146.90, அதிகபட்சம் ரூ.160-க்கு விற்பனையானது.
இரண்டாம் தரம் குறைந்தபட்சம் ரூ.70.11, அதிகபட்சம் ரூ.157.29-க்கு விற்பனையானது. ஏலத்தில், மொத்தம் 1.23 லட்சம் கிலோ கொப்பரை, ரூ. 1.78 கோடிக்கு விற்பனையானது. கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில் கொப்பரை வரத்து குறைந்ததுதான் விலை அதிகரிக்க காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
» ‘பிராந்தியப் பெருமை என்ற போர்வையில் பிரிவினைவாதம்’ - திமுக அரசுக்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்