பாதாள சாக்கடை அடைப்பு: உதகை சாலைகளில் ஓடும் கழிவுநீர் - மக்கள் அவதி

By ஆர்.டி.சிவசங்கர்

நீலகிரி: உதகையில் 2 நாள் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் பாதாள சாக்கடையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 540 பேர் வசித்து வருகின்றனர். 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் உள்ளன. இது தவிர உதகைக்கு சுற்றுலாவாக வழக்கமான நாட்களில் சுமார் 5 ஆயிரம் பேரும், வார விடுமுறை நாட்களில் சுமார் 10 ஆயிரம் பேரும், சீசன் காலங்களில் தினசரி சுமார் 20 ஆயிரம் பேரும் வந்து செல் கின்றனர். தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக உள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினமும், நேற்றும் என 2 நாட்கள் மழை பெய்தது. இந்த 2 நாள் மழைக்கே தாக்குப்பிடிக்காமல் உதகையில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. குறிப்பாக உதகை-மேட்டுப்பாளையம் சாலை சேரிங்கிராஸ் பகுதி மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சேரிங்கிராஸ் சாலை வழியாக செல்லும் பாதாள சாக்கடையில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர், சாலையில் ஆறாக ஓடுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்லும் உதகை அரசு தாவரவியல் பூங்கா நடைபாதையில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் ஆறாக ஓடுகிறது. அந்த நடைபாதையில் நடந்து செல்ல இடைஞ்சலாக பள்ளம் உள்ளது. இதேபோல் காபி ஹவுஸ், எல்க்ஹில் உட்பட பல இடங்களிலும் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் கழிவுநீர் செல்கிறது. இதனால் துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு உண்டாகும் அபாயம் உள்ளது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: உதகையில் கோடை சீசன் நேரத்திலும், மழை பெய்யும் நேரத்திலும் பாதாள சாக்கடையில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் வெளியேறி ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப் பட்ட பாதாள சாக்கடை திட்டத்தில் பாதாள சாக்கடை குழாய்கள் சுமார் 6 இன்ச் சுற்றளவில் பதிக்கப்பட்டு உள்ளது. இது அன்றைய சூழ்நிலையில் உதகை மக்கள் தொகை எண்ணிக்கைக்கு போதுமானதாக இருந்தது.

ஆனால், தற்போது உதகையில் மக்கள் தொகை ஒரு லட்சத்தை தாண்டி உள்ளதால், கழிவுநீர் அதிகளவு சேகரமாகிறது. எனவே, பாதாள சாக்கடை குழாய்களை பெரிய அளவில் பதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உதகையை மாநகராட்சியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE