தென் மாவட்டங்களில் சாதி ரீதியிலான கொலைகளை தடுக்க பேரவையில் வலியுறுத்துவோம்: திருமாவளவன் தகவல்

By KU BUREAU

தென் மாவட்டங்களில் நடக்கும் சாதி ரீதியிலான கொலைகளை தடுக்குமாறு சட்டப்பேரவையில் வலியுறுத்துவோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தெரிவித்தார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியது: கடந்த 4 ஆண்டுகளில் திமுக அரசு ஏராளமான நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. திமுக கூட்டணிக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு வழக்கம்போல கிடைக்கும். எங்களது கட்சியை மக்கள் முழுமையாக ஏற்கும் காலம் வரும். அதிகார வலிமையுள்ள கட்சியாக அங்கீகரிக்கும் காலம் வரும்.

மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் மன்னிப்புக் கேட்கவில்லை, வருத்தமும் தெரிவிக்கவில்லை. சொன்ன வார்த்தையைத் திரும்பப் பெற்றுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அவரது பேச்சு அநாகரீகமற்ற செயல். அதை வரவேற்கக் கூடிய வகையில் தமிழக பாஜக பேசுவது அதைவிட அநாகரீகமானது.

வட இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கிடையாது. நாம் ஆங்கிலத்தில் பேசினாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. ஆங்கிலத்தை அவர்கள் இன்னொரு மொழியாகக் கற்கவில்லை. ஒரு மொழிக் கொள்கையையான இந்தி பேசக் கூடியவர்கள், தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை கொண்டுவர முயற்சிக்கின்றனர். இந்தி கற்றுக் கொடுப்பதை யாரும் எதிர்க்கவில்லை. திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம்.

தென் மாவட்டங்களில் சாதி ரீதியிலான கொலைகள் நடக்கின்றன. குறிப்பாக, மதுரை, சிவகங்கை பகுதிகளில் சிறுவர்களை கொலை செய்கின்றனர். மாணவர்களைத் தாக்கும் சம்பவமும் நடக்கிறது. சாதிய மோதல்களைத் தடுக்க புலனாய்வு ரீதியான அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வலியுறுத்துவோம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE