பாண்டிக்கோவில் ‘ரிங்ரோடு’ பகுதிகளில் குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் - மதுரை மாநகராட்சி எச்சரிக்கை 

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ''மதுரை மாநகராட்சி பாண்டிகோவில் ரிங்ரோடு பகுதிகளில் குப்பைகள் கொட்டினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்,'' என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 'மதுரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியான மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், உலகனேரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, உத்தங்குடி மற்றும் பாண்டிக் கோவில் ரிங்ரோடு ரவுண்டானா ஆகிய பகுதிகளுக்கு இடையில் உள்ள காலியிடங்கள், சாலையின் ஓரங்கள், நீர்நிலைகள், மற்றும் திறந்தவெளி கால்வாய்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனத்தார் குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப் படுவதுடன் பொது மக்களுக்கும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 பிரிவு 180, தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவு 384 மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 (Solid Waste Management Rules 2016) மதுரை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2017 (Solid Waste Management Bylaw 2017) சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 பிரிவு 15 ஆகிய சட்ட விதிகளின்படி தொடர்ச்சியாக குப்பை கொட்டுவோர் மீது எச்சரிக்கை அறிவிப்பு விடுத்த 24 மணி நேரத்திற்குள் அதனை அகற்றா விட்டால் அவர்கள் மீது அபராதம் ரூ.1 லட்சம் விதிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும்.

எனவே பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் குப்பைகளை மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து மதுரை மாநகராட்சியின் சார்பில் குப்பைகள் சேகரிப்பு பணிகள் செய்யும் தூய்மை பணியாளர்களிடம் வழங்குமாறும், குப்பைகளை அருகில் உள்ள மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் கொட்டுமாறும் மதுரை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.' இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE