சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார். அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம். இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ். இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? என அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘நேற்று நான் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கேட்ட கேள்விக்கு, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அளித்திருக்கும் பதிலைக் கேட்டேன். தனது இரு மகன்களும் இரு மொழிக் கொள்கையில்தான் படித்தார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால், அந்த இரு மொழிகள் எவை என்பதை, அண்ணன் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சொல்ல மறந்துவிட்டார்.
அவர் மகன்கள் கற்ற இரண்டு மொழிகள், முதல் மொழி: ஆங்கிலம், இரண்டாம் மொழி: பிரெஞ்சு/ ஸ்பானிஷ். இது தான் உங்க இரு மொழிக் கொள்கையா? வெளங்கிடும்.
தமிழ் மற்றும் ஆங்கில மொழியுடன், மூன்றாவதாக ஒரு இந்திய மொழியோ, உயர்நிலை வகுப்புகளில் ஒரு வெளிநாட்டு மொழியோ, நமது அரசுப்பள்ளி மாணவர்கள் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துங்கள் என்று தானே கேட்கிறோம். அதைத் தடுக்க இத்தனை நாடகங்கள் ஏன்?
» என்னோடு நேருக்குநேர் விவாதிக்க தெம்பு, திராணி இருக்கிறதா? - முதல்வருக்கு இபிஎஸ் சவால்!
» கல்வி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விஷயத்தில் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம்: ஸ்டாலின் உறுதி
அண்ணன் பிடிஆர் அவர்களது இரு மகன்களும், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை எட்ட வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அவர்களுக்குக் கிடைத்த பல மொழிகள் கற்கும் வாய்ப்பை, நமது அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளியவர்களின் குழந்தைகளுக்கும் வழங்குங்கள் என்று தான் கேட்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்