சென்னை: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பல நேரங்களில் தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் சிறுமைப்படுத்தி வருகிறார். இந்தச் செயல் தொடருமானால் தமிழ்நாடு அமைதி கொள்ளாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒன்றிய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க முடியாது என்று தமிழ்நாடு ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசும், கல்வி அமைச்சகமும் புதுப்புது திட்டங்களை அறிமுகப் படுத்தி ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக பள்ளிக் கல்வித் துறைக்கு, சட்டபூர்வமாக வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழ்நாடு உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் முறையான பதில் அளிக்காமல் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் இழிவு படுத்தி தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார். அவர் பல நேரங்களில் தமிழ் மக்களையும், தமிழ்நாட்டையும் சிறுமைப்படுத்தி வருகிறார். இந்தச் செயல் தொடருமானால் தமிழ்நாடு அமைதி கொள்ளாது என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும். அமைச்சரின் ஆணவப் பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது..
» தமிழர்கள் மீது பாஜகவினருக்கு வன்மம்; அதனால்தான் இப்படி பேசுகிறார்கள் - முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்