கடலூர்: சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி பேருந்து நிலையப் பகுதியில் போராட்டத்தில் பத்து பெண்கள் உள்ளிட்ட பாஜகவினர் 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. மது பிரியர்களால் அடிக்கடி சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டும், அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தும் வந்தனர்.
ஆனால் கடைகள் இரண்டும் மாற்றப்படாமல் அதே இடத்தில் தொடர்ந்து இயங்கி வந்த நிலையில், கடலூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் இந்த 2 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி போராட்டம் நடத்தி சார் ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி இன்று (மார்ச்.10) காலை பாஜக கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் முன்னாள் எம்எல்ஏ தமிழழகன் தலைமையில் பாஜகவினர் பேருந்து நிலையம் பகுதியில் திரண்டனர்.
» நத்தத்தில் உயிரிழந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரியின் உடல் தானம்: மாணவர்களின் கல்விக்காக வழங்கல்
» வீட்டுக்கு ஒரு இலவச இன்வெர்ட்டர் கொடுக்க வேண்டும்: அரசுக்கு அதிமுக கோரிக்கை
பின்னர் அவர்கள் டாஸ்மார்க் கடையை அகற்ற வேண்டும் என்று முழக்கமிட்டபடி பேருந்து நிலையப் பகுதியில், தரையில் அமர்ந்து முழக்கமிட்டபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சிதம்பரம் டிஎஸ்பி லா மேக் தலைமையில் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் மற்றும் போலீஸார் வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர்.
பாஜக மாவட்ட தலைவர் முன்னாள் எம்எல்ஏ தமிழழகன், மாவட்ட மகளிரணி செயலாளர் அர்ச்சனா ஈஸ்வர், முன்னாள் மாவட்ட தலைவர் மருதை, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் பாலு விக்னேஷ் வரன் மற்றும் 10 பெண்கள் உள்ளிட்ட 50 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.