சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை மதிமுக முதன்மைச் செயலர் துரை வைகோ எம்.பி. நேற்று முன்தினம் மாலை சந்தித்து பேசினார். அப்போது, தனது கோரிக்கையை ஏற்று மக்காச்சோளத்துக்கு விதிக்கப்பட்ட 1 சதவீத செஸ் வரியை ரத்து செய்ததற்கு பொன்னாடை போர்த்தி முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். தொடர்ந்து, சில கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அவர் அளித்தார்.
மனுவில் கூறியிருப்பதாவது:கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட பகுதிவாழ் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தீப்பெட்டி தொழிலை நலிவடையச் செய்யும் லைட்டர்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும்.
தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளை இளையரசனேந்தலை தலைமையிடமாக கொண்டு தனி ஒன்றியமாகவோ, கோவில்பட்டி ஒன்றியத்துடனோ இணைத்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.
ஐயா வைகுண்டர் பிறந்தநாளை அரசு விடுமுறையாக அறிவித்து, மதுக்கடைகளை மூட உத்தரவிட வேண்டும். மாமன்னர் திருமலை நாயக்கருக்கு கோவில்பட்டியில் சிலை அமைக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.