இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 14 மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 6-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 14 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களது மீன்பிடி படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. நடப்பாண்டின் கடந்த இரு மாதங்களில் 9வது முறையாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 227 மீன்பிடிப் படகுகளும், 107 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் பிடியில் உள்ளதை ஆழ்ந்த கவலையுடன் சுட்டிக்காட்டுகிறேன்.
தற்போது, இலங்கையில் தமிழக மீனவர்கள் நீண்ட காலத்துக்கு சிறை வைக்கப்பட்டிருப்பதோடு, அவர்களை விடுவிக்க அதிகபட்ச அபராதத்தை விதிக்கத் தொடங்கியுள்ளனர்.
சிறைவாசம், அபராதம் மற்றும் இலங்கை சிறையில் இருக்கும் காலத்தில் ஏற்படும் வருமான இழப்பு போன்ற துன்பங்களுக்கும் அப்பால், அவர்களின் பொருளாதாரத்துக்கு உதவுக்கூடிய ஓரே ஆதாரமாக விளங்கும் அவர்களின் படகுகளையும் இலங்கை அரசு திருப்பித் தராததால், தமிழக மீனவர்கள் தற்போது தங்களது வாழ்வாதாரத்தில் பெரும் பொருளாதார இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
எனவே, கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க தேவையான அனைத்து தூதரக வழிமுறைகளையும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது