தமிழக மீனவர்கள் 17 பேருக்கு ரூ.12.50 லட்சம் அபராதம்: இலங்கையில் உள்ள மன்னார் நீதிமன்றம் உத்தரவு

By எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 17 பேருக்கு ரூ.12.50 லட்சம் அபராதம் விதித்து இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்தும் 3 விசைப்படகுகளில் கடலுக்குச் சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, அனைவரும் நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.

மீனவர்களின் காவல் இன்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, அனைவரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, 17 மீனவர்களுக்கு தலா (இலங்கை மதிப்பில்) ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் அபராதமும், ஒரு மீனவர் மட்டும் இரண்டாவது முறையாக சிறைபட்டிருந்ததால் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.

17 மீனவர்களுக்கும் மொத்த அபராதத் தொகை (இலங்கை மதிப்பில்) ரூ.42 லட்சத்து 50 ஆயிரம். இதன் இந்திய மதிப்பு ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் ஆகும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE