மும்மொழி கொள்கையால்தான் குஜராத் பொருளாதார ரீதியாக உச்சம் தொட்டுள்ளது: ராம.சீனிவாசன் கருத்து

By KU BUREAU

இந்தி திணிக்கப்படுவதாக திமுக நாடகமாடுகிறது என்று பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: புதிய கல்விக் கொள்கை வாயிலாக இந்தி திணிக்கப்படுவதாக திமுக நாடகமாடுகிறது. நாடு முழுவதும் 3-வது மொழியாக இந்தி கற்க வேண்டும் என்பது காங்கிரஸின் கொள்கை. கேரளாவில் மும்மொழிக் கல்விக் கொள்கை அமலில் உள்ளது. தமிழக எல்லையில் உள்ள கேரளப் பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது.

தமிழகத்தில் 1965-ல் அண்ணா நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் நேர்மை இருந்தது. அவர் இந்தி பள்ளிக்கூடம் நடத்தவில்லை. இந்தி எதிர்ப்பில் அண்ணாவிடம் இருந்த நேர்மை ஸ்டாலினிடம் இல்லை.

தற்போது இந்தியை திணிக்கவில்லை. ஏதாவது ஒரு இந்திய மொழியை மூன்றாவது மொழியாக கற்றுக்கொள்ளுங்கள் என்றுதான் கூறுகிறோம். பிற மாநிலங்களில் தமிழைக் கற்பிக்குமாறு பாஜக கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக பிற மாநில முதல்வர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைக்க வேண்டும். நாடு முழுவதும் தமிழ் வளர்ச்சித் துறையை ஏற்படுத்த வேண்டும். மும்மொழிக் கொள்கையை, நாடு முழுவதும் தமிழை கொண்டு செல்வதற்கான வாய்ப்பாக தமிழக அரசு பயன்படுத்த வேண்டும்.

கல்வி மாநிலப் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது திமுகவின் நிலைப்பாடு. பொதுப் பட்டியலில் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. மும்மொழிக் கொள்கையை ஏற்றதால்தான் குஜராத் பொருளாதார ரீதியாக உச்சத்தை தொட்டுள்ளது. மும்மொழி கொள்கை விவகாரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு நிலைப்பாடு எடுக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE