‘தென்மாநில பிரதிநிதிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு’ -  அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் உரையின் முழு விவரம்!

By KU BUREAU

சென்னை: தொகுதி மறுவரையறை பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” அமைத்திட தீர்மானிப்பதாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (5.3.2025) தலைமைச் செயலகத்தில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு - மாநில உரிமையை காப்பது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இது முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, ‘ ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக் கூடிய ஒரு விவகாரத்தில் முடிவெடுப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம். கட்சி வேறுபாடுகளை கடந்து, அழைத்திருப்பது யார் என்று பார்க்காமல் எவ்வளவு முக்கியமான பிரச்சினைக்காக அழைத்திருக்கிறோம் என்று மனதில் வைத்துக் கொண்டு இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தமிழ்நாடு மிகப்பெரிய உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருப்பதை உணர்த்துவதற்காகத் தான், இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

· தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது.

· இன்றைக்கு தமிழ்நாட்டில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது. இதை குறைக்கின்ற அபாயம் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. பொதுவாக, இதை மக்கள்தொகையை கணக்கிட்டுத்தான் செய்வார்கள்.

· மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்திய நாட்டின் மிக முக்கியமான இலக்கு! அந்த இலக்கில் நம்முடைய தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது. பல பத்தாண்டுகளாக, வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நாம் இதை சாதித்திருக்கிறோம்.

· தற்போது இருக்கின்ற 543 நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்தால், மக்கள் தொகை குறைவாக இருப்பதால், நம்முடைய தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. தமிழ்நாடு மொத்தமாக 8 மக்களவை இடங்களை இழக்கும் என்று சொல்கிறார்கள். அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் கிடைக்க மாட்டார்கள்; 31 எம்.பி.க்கள் தான் இருப்பார்கள்.

· நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 848-ஆக உயர்த்தப்பட்டு, தற்போதைய விகிதாச்சாரத்தின்படி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், நமக்குக் கூடுதலாக 22 தொகுதிகள் கிடைக்க வேண்டும். ஆனால், தற்போதைய மக்கள் தொகையின்படி மறுசீரமைப்பு செய்தால், பத்து தொகுதிகள்தான் கூடுதலாக கிடைக்கும். இதனால் நாம் 12 கூடுதல் தொகுதிகளை இழக்க நேரிடும்.

· இந்த இரண்டு முறைகளிலும், நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து, அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு, அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும்! இதனால், தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படும்.

· இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பற்றிய கவலையில்லை; நம்முடைய தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த கவலை! நம்முடைய தமிழ்நாடு எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற வேண்டுகோளை, உங்கள் அனைவரின் முன்பும் நான் வைக்கிறேன். அனைத்துக் கட்சிகளும், கட்சி எல்லைகளைக் கடந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால், அது தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவ எண்ணிக்கையை குறைந்துவிடும்.

எனவே, இந்தச் சதியை நாம் அனைவரும் சேர்ந்து முறியடித்தாக வேண்டும். மக்கள்தொகை அடிப்படையில், மக்களவை மாநிலங்களவை மற்றும் சட்டமன்றப் பேரவைகளின் இடங்கள் குறையும் என்று சொல்வது, “மக்கள்தொகை கட்டுப்பாடு” எனும் கொள்கையை, முனைப்பாக செயல்படுத்தி, நாட்டு வளர்ச்சியில் பெரும் பங்காற்றியுள்ள தென்மாநிலங்களுக்கு தரப்படும் தண்டனையாகதான் அமையும். இதை முன்கூட்டியே உணர்ந்துதான், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

தமிழ்நாட்டின் உரிமை, கூட்டாட்சிக் கருத்தியலோடு கோட்பாடு, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவம் உள்ளிட்ட எதுவும் பாதிக்கப்படக்கூடாது என்பதை தீர்க்கமாக திடமாக அப்போதே நாம் வலியுறுத்தியிருக்கிறோம்.

இந்த தொகுதி மறுசீரமைப்பு என்பது, தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல – ஒட்டுமொத்த தென்னிந்தியாவுக்கே அபாயமான செயல்! இதில் நமக்குள் கருத்து மாறுபாடு நிச்சயமாக இருக்காது என்று நினைக்கிறேன்; இருக்கக் கூடாது என்று விரும்புகிறேன்.

இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கும் தென் மாநிலங்களின் அரசியல் உரிமைக்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

· இது, இந்திய ஜனநாயகத்தில் தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் அரசியல் பிரதிநிதித்துவ உரிமை மீதான நேரடி தாக்குதல்!

· இப்படியொரு சம நீதியற்ற அநீதியான தொகுதி மறுசீரமைப்பு செயல்படுத்தப்பட்டால், இந்திய அரசியலில் தமிழ்நாட்டின் குரல் நெரிக்கப்படும்.

· தமிழ்நாட்டின் நலன் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் நலன் ஆகியவற்றை பாதுகாப்பதில் நம் மாநிலத்திற்கு இருக்கும் பலம் குறைக்கப்படும்.

· 39 எம்.பி.க்கள் இருக்கும்போது எழுப்பும் குரலையே, ஒன்றிய அரசு ஏற்க மறுக்கும் நிலையில் இந்த எம்.பி.க்கள் எண்ணிக்கை இன்னும் குறைந்தாலோ குறைக்கப்பட்டாலோ அது தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட அழிக்க முடியாத அநீதியாக மாறும் என்பதை, எல்லோரும் நினைத்துப் பார்க்கவேண்டும்! எனவே நம்முடைய நிலைப்பாட்டை, அழுத்தம் திருத்தமாக ஒரே சிந்தனையோடு எடுத்தாகவேண்டும்!

வர இருக்கும், இல்லை என்றால், எதிர்காலத்தில் நடைபெறும் இருக்கும் “மக்கள்தொகை கணக்கெடுப்பு” அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும் மக்கள்தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பை, நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.

எனவே, உறுதியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி நான் அந்த தீர்மானங்களை முன்மொழிகிறேன்.

தீர்மானங்கள்

· இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய - மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.

· நாட்டின் நலனுக்காக மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் அவர்கள் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று மாண்புமிகு பிரதமர் அவர்கள் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

· மேலும், நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ அதே விகிதத்தில் - தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

· தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக - பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டம் வலியுறுத்துகிறது.

· இக்கோரிக்கைகளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக்கூட்டம் முன்வைக்கிறது.

· இக்கோரிக்கைளையும், அவைசார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும் - மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் - தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

இந்த தீர்மானங்களின் மீதான உங்களின் கருத்தை, அனைத்துக் கட்சித் தலைவர்களும் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE