புதுடெல்லி: சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளையும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்கின்றன. ஆய்வின்போது போலி, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சளி தொற்று, கிருமி தொற்று, சர்க்கரை நோய், ஜீரண மண்டல பாதிப்பு, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 145 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது.
அந்த மருந்துகளில் பெரும்பாலானவை இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் தயாரிக்கப் பட்டவையாக இருந்தன. அதன் விவரங்கள், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் cdsco.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த விவரங்களை அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.