சென்னை: சென்னை ராயப்பேட்டையில் மார்ச் 7-ம் தேதி நடைபெறும் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கிறார்.
இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈகை பண்பு, நல்லிணக் கத்தை போற்றும் புனித ரமலான் நோன்பு, முஸ்லிம் பெருமக்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வரும் 7-ம் தேதி மாலை சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற உள்ளது.
மாலை 6.24 மணிக்கு நோன்பு திறப்பு, 6.28 மணிக்கு மக்ரிப் பாங்கு, 6.35 மணிக்கு மக்ரிப் தொழுகை நடைபெற உள்ளது. மக்ரிப் தொழுகை முடிந்ததும், தவெக சார்பில் இப்தார் விருந்து நடைபெறுகிறது. இதில் தவெக தலைவர் விஜய், முஸ்லிம் பெருமக்களோடு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.