‘இவன் என்ன அழைப்பது, நாம் என்ன செல்வது என கௌரவம் பார்க்காதீர்கள்’ - முதல்வர் ஸ்டாலின் ஆதங்கம்!

By KU BUREAU

நாகை: தொகுதி மறுசீரமைப்பு குறித்து கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் கௌரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது, நாம் என்ன செல்வது என்று நினைக்க வேண்டாம். இது தமிழ்நாட்டின் பிரச்சினை. அதைச் சிந்தித்துப் பார்த்து, நீங்கள் வர வேண்டும் என்று இந்த நேரத்தில் அழைப்பு விடுக்கிறேன் என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

நாகையில் நடந்த திருமண நிகழ்வில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘இன்றைக்கு நாம் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினை என்ன என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். மும்மொழிக் கொள்கையைக் கட்டாயப்படுத்தி, கொண்டு வந்து விட வேண்டும் என்று இன்றைக்கு ஒன்றிய அரசு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல், தொகுதி மறுசீரமைப்பையும் கொண்டு வந்து, எப்படியாவது தமிழ்நாட்டின் உரிமையை - எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்பதில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது என்பதும் உங்களுக்கு தெரியும். அதனால்தான் வருகிற 5 ஆம் தேதி நாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் 40 கட்சிகள் - யார் யார் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்களோ, அந்த 40 கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் வருவதாக நமக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார்கள். ஆனால், குறிப்பிட்ட ஒரு சிலர், நாங்கள் வர வாய்ப்பில்லை; வர முடியாது என்றும் செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். நான் அவர்களை எல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்ள விரும்புவது, வர இயலாது; வர முடியாது என்று சொல்பவர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஏதோ தனிப்பட்ட தி.மு.க.விற்கோ, தனிப்பட்ட உங்களுக்கோ உள்ள பிரச்சினை இல்லை இது. தனிப்பட்ட கட்சிக்கு அல்ல இது. இதை அரசியலாக நீங்கள் பார்க்காதீர்கள். நம்முடைய உரிமை - நம்முடைய தமிழ்நாட்டின் உரிமை.

இன்றைக்கு 39 எம்.பி.க்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அவர்களை வைத்துக் கொண்டே போராடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், அதையும் மீறி இன்றைக்கு இன்னும் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால்தான், நாம் எண்ணும் எண்ணங்களை எல்லாம் நிச்சயமாக நிறைவேற்ற முடியும். எனவே, அதையெல்லாம் நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் மீண்டும் அனைத்துக் கட்சிகளையும் நான் கேட்டுக் கொள்ள விரும்புவது, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வர முடியாது என்று கூறியவர்களும் தயவு கூர்ந்து வர வேண்டும்... வர வேண்டும் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாக நான் அழைப்பு விடுக்கிறேன்.

இதில் கௌரவம் பார்க்காதீர்கள். இவன் என்ன அழைப்பது, நாம் என்ன செல்வது என்று நினைக்க வேண்டாம். இது தமிழ்நாட்டின் பிரச்சினை. அதைச் சிந்தித்துப் பார்த்து, நீங்கள் வர வேண்டும் என்று இந்த நேரத்தில் அழைப்பு விடுக்கிறேன்' எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE